நெய்வேலி, ஜவஹர் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கல்லூரி முதல்வர் வெ.தி.சந்திரசேகரன் தலைமை வகித்து விழாவை தொடக்கி வைத்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை முன் துறை வாரியாக மாணவர்கள் பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டு இயற்கையை வழிபட்டனர். மேலும், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், கும்மி, கோலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் கே.ராஜலட்சுமி செய்திருந்
தார்.
விழாவில், ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ரோட்டரி கிளப் ஆளுநர் ஜேனி ஸ்பயர், முன்னாள் ஆளுநர் சார்லி ஸ்பயர், குழுத் தலைவர் மெர்வின் வில்லியம்ஸ் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்ட என்எல்சி நிறுவன துணைப் பொது மேலாளர் பி.செல்வம், கல்லூரிச் செயலர் எம்.முகமது அப்துல் காதர் ஆகியோர் கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அதிகாரிகள் ஜி.ராஜசேகர், பி.விவேகானந்தன் ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
மன வளர்ச்சி குன்றியோர் பள்ளி: நெய்வேலி அருகே குறவன்குப்பத்தில் உள்ள மன வளர்ச்சி குன்றியோர் நலப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மன நல நிபுணர் சகாய ராஜா தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியை சகாய பாக்கியம் வரவேற்றார். அரிமா சங்கம் சி.லட்சுமிநாராயணன், பள்ளி நிர்வாகி ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் சரவணன், அரிமா சங்க மாவட்டத் தலைவர் அன்வர்தீன் ஆகியோர் கலந்துகொண்டு பொங்கல் விழாவை தொடக்கி வைத்தனர். மாணவர்களுக்கு போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கினர். காப்பாளர் தாஸ் நன்றி கூறினார்.