மார்க்ஸிய தத்துவத்தை உருவாக்கிய காரல் மார்க்ஸின் 201-ஆவது பிறந்த நாள் விழா கடலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
கடலூர் சிஐடியூ அலுவலகம் எதிரே காரல் மார்க்ஸ் உருவப் படம் வைக்கப்பட்டு மலர் தூவி, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. அப்போது, பொதுவுடமை தத்துவத்தை வலியுறுத்தி முழக்கமிட்டனர். விழாவையொட்டி, கட்சியின் கடலூர் நகர் குழு சார்பில் 50 வாரங்களுக்கு ஞாயிறுதோறும் நடைபெறும் மார்க்ஸ் குறித்த வகுப்புக்கான முதல் வகுப்பு தொடக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கட்சியின் நகரச் செயலர் ஆர்.அமர்நாத் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மு.மருதவாணன், மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.பாஸ்கரன், நகர்குழு உறுப்பினர்கள் ஆனந்த், சு.தமிழ்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மார்க்ஸ் குறித்து கவிஞர் பால்கி சிறப்புரையாற்றினார்.