கடலூரில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி தப்பியோடினார்.
குறிஞ்சிப்பாடி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் ஜான்சன் (26). இவர் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கடலூர் புதுநகர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், போலீஸார் அவரை மருத்துவப் பரிசோதனைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை அழைத்துச் சென்றனர். அப்போது, அவர் அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்து, காவலர் சதீஷ்பாபு அளித்த புகாரின் பேரில், புதுநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.