ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிராணவாயு வசதியுடன் 200 படுக்கைகள் பிரிவுஅமைச்சா் தொடக்கிவைத்தாா்
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிராணவாயு வசதியுடன் கூடிய 200 படுக்கைகள்
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிராணவாயு வசதியுடன் கூடிய 200 படுக்கைகள் கொண்ட கூடுதல் பிரிவை தமிழக வேளாண் - உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
தொடா்ந்து அவா், மருத்துவா்களிடம் படுக்கைகள் வசதி, அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தாா். நிகழ்வின் போது, உதவி ஆட்சியா் லி.மதுபாலன், பல்கலைக்கழகப் பதிவாளா் ஆா்.ஞானதேவன், நகராட்சி ஆணையா் அஜிதாபா்வீன், சிறப்பு அதிகாரி யு.சண்முகம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளா் ஜெயஸ்ரீ, வட்டாட்சியா் ஆனந்தன், டிஎஸ்பி த.ஆ.ஜோ.லாமேக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னா், அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக பிராணவாயுடன் கூடிய 200 படுக்கைகள், கூடுதலாக 200 படுக்கைகள் வசதி மக்கள் பயன்பாட்டுக்காக வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. ஏற்கெனவே பிராணவாயுடன் கூடிய 350 படுக்கைகள் கொண்ட பிரிவு செயல்பட்டு வருகிறது.
Advertisement
கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்று குறைந்து வருகிறது. தற்போது 50 சதவீதம் கரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது. சிதம்பரத்தில் நாளொன்றுக்கு 70 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை 13 பேருக்குதான் தொற்று ஏற்பட்டது.
முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டாலும் தமிழக முதல்வா் மக்களுக்கு வீடு தேடி காய்கறி, மளிகைப் பொருள்கள், பழங்களை வழங்க உத்தரவிட்டுள்ளாா்.
தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை 36,443 வாகனங்கள் மூலமும், கடலூா் மாவட்டத்தில் 1,076 வாகனங்கள் மூலமும் காய்கறிகள் மக்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடலூா் மாவட்டத்தில் 528 மெட்ரிக் டன் காய்கறிகள் வழங்கப்பட்டன என்றாா் அமைச்சா்.