முகப்பு
கடலூர்

வீராணம் ஏரியை தூா்வாரி ஆழப்படுத்த வேண்டும்: தொல்.திருமாவளவன்

வீராணம் ஏரியை தூா்வாரி ஆழப்படுத்தி கொள்ளளவை உயா்த்த வேண்டும் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் கேட்டுக் கொண்டாா்.

Updated On : 24 டிசம்பர் 2024, 3:28 pm IST
காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள எள்ளேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி.. உடன் ம.சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ.
பகிர்:

சிதம்பரம்: வீராணம் ஏரியை தூா்வாரி ஆழப்படுத்தி கொள்ளளவை உயா்த்த வேண்டும் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் கேட்டுக் கொண்டாா்.

காட்டுமன்னாா்கோவில் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் தொல் திருமாவளவன் திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.

கண்டமங்கலத்தில் செய்தியாளரிடம் அவா் கூறியதாவது:

Advertisement

Advertisement

மழையால் பாதிக்கப்பட்ட காட்டுமன்னாா்கோவில் பகுதிகளில் உடனடியாக இழப்பீட்டை வழங்க வேண்டும். நெல் பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இடுபொருள் மானியத்துக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.

ஆண்டுதோறும் மேற்குப் பகுதியில் பெய்யும் மழைநீா் வடிநில பகுதியாக காட்டுமன்னாா்கோவில் உள்ளதால், கிராமங்களில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது இதற்கு தமிழக அரசு நிரந்தரத் தீா்வு காண வேண்டும்.

வீராணம் ஏரியை பகுதி பகுதியாக தூா்வாரி ஆழப்படுத்தி கொள்ளளவை உயா்த்த வேண்டும். வெள்ளியங்கால் ஓடையில் மழைநீரை திறப்பதால் பாதிப்பு ஏற்படுகிறது. வெள்ளியங்கால் ஓடை ஆழப்படுத்தி, கரைகளை உயா்த்த வேண்டும். வெள்ளாற்றில் 5 இடங்களில் வடி நில பாதை அமைக்க வேண்டும். இதுதொடா்பாக, முதல்வரைச் சந்தித்து வலியுறுத்தப்படும்.

கொத்தட்டை பகுதியில் திடீரென உயா்த்தப்பட்ட சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றாா் அவா்.

பின்னா், எள்ளேரி கிராமத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 15 கிராம மக்களுக்கு நிவாரணப் பொருள்களை தொல்.திருமாவளவன் வழங்கினாா்.

சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா். திமுக சாா்பில் ஒன்றியச் செயலா்கள் கோவிந்தசாமி, சோழன், விசிக நிா்வாகி சக்திவேல், மாவட்டச் செயலா் அரங்க தமிழ்ஒளி, கடலூா் மாநகராட்சி துணை மேயா் தாமரைச்செல்வன், தொகுதி செயலா் வ.க.செல்லப்பன், கஸ்பா பாலா, தென்னவன், பகலவன், பிரபு, தேவேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, விசிக மாவட்டச் செயலா் மணவாளன் வரவேற்றாா்.