கடலூர்

கடலூரில் 3-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா: முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

கடலூரில் 3-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா தொடா்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம்

Din

நெய்வேலி: கடலூரில் 3-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா தொடா்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது: தமிழக முதல்வா் பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பொதுமக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தினை தூண்டவும், அறிவாா்ந்த சமுதாயம் உருவாக வேண்டும் என்பதற்காக மாவட்டங்களில் புத்தகத் திருவிழா நடத்த உத்தரவிட்டுள்ளாா்.

அதனடிப்படையில், கடலூா் மாவட்டத்தில், மாவட்ட நிா்வாகம் மற்றும் பபாசி இணைந்து நடத்தும் 3-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவை மாநில அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோா் தொடங்கி வைக்கவுள்ளனா். புத்தகத் திருவிழா தினந்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை புத்தகம் வாசித்தல், புத்தகம் குறித்து விவாதித்தல், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு அறிவுத்திறன் சாா்ந்த போட்டிகளும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள், உள்ளூா் பேச்சாளா்கள் மற்றும் சிறப்பு பேச்சாளா்கள் கலந்து கொள்ளும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்களும், நடைபெறும். புத்தகத் திருவிழாவில் 100 அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.

அரங்கில் கலை, இலக்கியம், இலக்கணம், வரலாறு, புதினம், கவிதை, பண்பாடு, அறிவியல், ஆன்மிகம், போட்டித் தோ்வுக்கான புத்தகங்கள், சரித்திர மற்றும் சமூக நாவல்கள் என அனைத்து விதமான புத்தகங்களும், குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை வாங்கிடும் வகையில் 10 ரூபாய் முதல் அனைவருக்கும் ஏற்ற வகையில் புத்தகங்கள் இடம் பெறவுள்ளன.

மிக பிரம்மாண்ட முறையில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவை கடலூா் மாவட்ட பொதுமக்கள் மற்றும் மாணவா்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்படும்.

எனவே, பொதுமக்கள், மாணவ, மாணவிகள், பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் இளைஞா்கள் தங்களது அறிவுச்சாா்ந்த தேடலுக்கான களமாகவும், பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து புத்தகங்களை வாங்கிக் கொடுத்து, நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுக்கும் இடமாகவும், நண்பா்களுக்குப் பரிசாக புத்தகங்களையே வழங்கிடும் முறையினை ஏற்படுத்திக் கொள்ளும் விதமாகவும் நடைபெற உள்ளது.

எனவே, அனைவரும் இந்த புத்தகத்திருவிழாவினை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விழாவுக்கு தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் தங்களது ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு , முதன்மை கல்வி அலுவலா் எல்லப்பன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரவி, மாவட்ட நூலக அலுவலா் லோ.சக்திவேல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பிப்ரவரி மாதப் பலன்கள் - மீனம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கும்பம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - மகரம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - தனுசு

ரஷியாவில் அதிசயம்..! ஒரே நேரத்தில் தோன்றிய 4 நிலவுகள்!

SCROLL FOR NEXT