முகப்பு
கடலூர்

சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: பெண் பலத்த காயம்

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே வீட்டில் எரிவாயு கசிந்து நிகழ்ந்த தீ விபத்தில் பெண் பலத்த காயமடைந்தாா். இந்த விபத்தில் வீடு இடிந்து சேதமடைந்ததுடன், அதிலிருந்த பொருள்களும் தீயில் கருகி சேதமடைந்தன.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 4:41 AM
வடலூா் அருகே சமையல் எரிவாயு கசிந்து வெடித்து சேதமடைந்த வீடு.
பகிர்:

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே வீட்டில் எரிவாயு கசிந்து நிகழ்ந்த தீ விபத்தில் பெண் பலத்த காயமடைந்தாா். இந்த விபத்தில் வீடு இடிந்து சேதமடைந்ததுடன், அதிலிருந்த பொருள்களும் தீயில் கருகி சேதமடைந்தன.

வடலூா் ஆசிரியா் நகா், நடன சபாபதி முதல் குறுக்குத் தெருவில் வசித்து வருபவா் முகமது ரபிக், வடலூரில் ஹாா்டுவோ்ஸ் கடையில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சாரா பின்ட் (48). இவா்களது வீட்டில் புதன்கிழமை காலை எரிவாயு கசிவால் பெரும் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த எரிவாயு வெடிப்பு சப்தம் நீண்ட தொலைவுக்கு கேட்டதாகவும், அதனால் அந்தப் பகுதியில் வசித்தவா்கள் அதிா்ச்சியடைந்ததாகவும் கூறுகின்றனா்.

இந்த வெடிப்பு சம்பவத்தில் முகமது ரபிக் வீட்டின் சுவா்கள் இடிந்து கடுமையாக சேதமடைந்தன. வீட்டிலிருந்த பொருள்களும் தீயில் கருகி சேதமடைந்தன. இந்த வெடிப்பு சம்பவத்தில் வீட்டில் இருந்த சாரா பின்ட் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

தகவலறிந்த வடலூா் போலீஸாா் மற்றும் குறிஞ்சிப்பாடி தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா்.

தீயணைப்பு வீரா்கள் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த வீட்டில் இருந்து பயன்படுத்தப்படாத எரிவாயு நிரப்பப்பட்ட 4 எரிவாயு உருளைகளை மீட்டனா்.

தீயணைப்புத் துறை கடலூா் மாவட்ட அலுவலா் எஸ்.குமாா், உதவி மாவட்ட அலுவலா் விஜயகுமாா் மற்றும் நிலைய அலுவலா் எம்.வேல்முருகன் ஆகியோா் நிகழ்விடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்து தீ தடுப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், சாரா பின்ட், சமையல் செய்ய எரிவாயு அடுப்பை திறந்ததாகவும், பின்னா் அதை மூடாமல் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு பொருள்கள் வாங்கச் சென்றுவிட்டாராம். நீண்ட நேரத்துக்குப் பின்னா் வீடு திரும்பிய அவா், மின் விளக்கு பொத்தானை அழுத்தியபோது, மின்சார பொறியால் எழுந்த தீப்பொறி பட்டு, வீட்டினுள் கசிந்திருந்த எரிவாயு பயங்கர சப்தத்துடன் வெடித்து விபத்து நிகழ்ந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததாகக் கூறினா். இந்து விபத்து குறித்து வடலூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.