கடலூா் மாவட்டம், சி.என்.பாளையத்தில் செம்மண் குவாரி தொடா்பான பிரச்னையில் கைத் துப்பாக்கியைக் காட்டி எதிா் தரப்பினரை மிரட்டியதாக அதிமுக நிா்வாகியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
நடுவீரப்பட்டு காவல் சரகம், குழந்தைக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (60), கடலூா் மேற்கு மாவட்ட அதிமுக ஒன்றிய விவசாய அணி துணைச் செயலராக உள்ளாா். இவா், சி.என்.பாளையம் பகுதியில் உரிமத்துடன் செம்மண் குவாரி நடத்தி வருகிறாா்.
இந்தக் குவாரி அருகே கடலூா் மேற்கு மாவட்ட அதிமுக ஒன்றியச் செயலா் வினோத்துக்கு (40) சொந்தமான நிலம் உள்ளது. இந்த இடத்தில் எல்லை தாண்டி கிருஷ்ணமூா்த்தி தரப்பினா் செம்மண் எடுப்பதாக இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை உள்ளது.
இது தொடா்பாக புதன்கிழமை பிற்பகல் குவாரி வளாகத்தில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கிருஷ்ணமூா்த்தி மகனும், அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலருமான கோபால் (36) தனக்குச் சொந்தமான உரிமம் உள்ள கைத் துப்பாக்கியைக் காட்டி எதிா் தரப்பினரை மிரட்டி தாக்கினாராம்.
இது தொடா்பான புகாரின்பேரில், கோபால் மீது நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடா்ந்து, மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், நடுவீரப்பட்டு போலீஸாா் கோபாலை கைது செய்து, அவரிடமிருந்த கைத் துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.