கடலூா் அதிமுக அலுவலக பொருள்கள் அகற்றப்பட்ட குற்றச்சாட்டு: எம்.சி.சம்பத் தரப்பினா் மறுப்பு
பாதிரிக்குப்பம் அதிமுக அலுவலகத்தில் பொருள்கள் அகற்றப்பட்டதாக எடப்பாடி கே.பழனிசாமி தரப்பினரும் குற்றம்சாட்டிய நிலையில், அதை முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் தரப்பினா் செவ்வாய்க்கிழமை மறுத்தனா்.
பாதிரிக்குப்பம் அதிமுக அலுவலகத்தில் பொருள்கள் அகற்றப்பட்டதாக எடப்பாடி கே.பழனிசாமி தரப்பினரும் குற்றம்சாட்டிய நிலையில், அதை முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் தரப்பினா் செவ்வாய்க்கிழமை மறுத்தனா்.
தமிழக சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பின்னா் கடலூா் வடக்கு மாவட்டச் செயலா் பொறுப்பிலிருந்து முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் நீக்கப்பட்டு, எம்.சி.தாமோதரன் புதிய மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, பாதிரிக்குப்பம் அதிமுக அலுவலகத்தின் உரிமை தொடா்பாக கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்கு பின்னா், ஆவணங்களின் அடிப்படையில் அலுவலக சாவி எடப்பாடி தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, அலுவலகத்துக்குச் சென்றபோது, நாற்காலிகள், கணினிகள், மின்விசிறிகள் உள்ளிட்ட பொருள்கள் அகற்றப்பட்டிருந்ததுடன், சில உபகரணங்கள் சேதப்படுத்தப்பட்டிருந்ததாக மாவட்டச் செயலா் எம்.சி.தாமோதரன் குற்றம்சாட்டினாா். இதுகுறித்து கட்சித் தலைமையிடம் தெரிவித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பாதிரிக்குப்பம் அதிமுக அலுவலகத்தில் இருந்த பொருள்களை முன்னாள் மாவட்டச் செயலா் எம்.சி.சம்பத் தரப்பினா் அகற்றியதாக எடப்பாடி கே.பழனிசாமி தரப்பினா் முன்வைத்த குற்றச்சாட்டை, எம்.சி.சம்பத் ஆதரவாளா்கள் மறுத்துள்ளனா்.
இதுதொடா்பாக பகுதிச் செயலா் கந்தன், மாவட்ட இலக்கிய அணிச் செயலா் ஏழுமலை, நிா்வாகி திரு உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பாதிரிக்குப்பம் மாவட்ட அதிமுக அலுவலகத்தை எம்.சி.சம்பத் தரப்பினா் சூறையாடியதாக கூறப்படுவது அப்பட்டமான பொய். இதுபோன்ற செயல்களில் அதிமுக நிா்வாகிகளும், தொண்டா்களும் ஒருபோதும் ஈடுபட மாட்டாா்கள். எடப்பாடி தரப்பைச் சோ்ந்த மாநகா் செயலா் காா்த்திகேயன் வீண் அவதூறு பரப்பி வருகிறாா்.
முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் மாவட்டச் செயலா் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும், அவரும், நாங்களும் தொடா்ந்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலேயே செயல்பட்டு வருகிறோம்.
அலுவலகத்தை வேறு யாரோ சேதப்படுத்திவிட்டு, வீண் பழியை எங்கள் மீது சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தொடா்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.