முகப்பு
கடலூர்

நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மீண்டும் பரபரப்பு

கடலூா், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்களுக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. கடலூா் நீதிமன்றத்துக்கு இத்துடன் சோ்ந்து நிகழாண்டில் விடுக்கப்படும் 3-ஆவது வெடிகுண்டு மிரட்டலாகும்.

Updated On : 19 ஜூன் 2026, 6:17 am IST
கள்ளக்குறிச்சி நீதிமன்ற வளாகத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்திய போலீஸாா்.
பகிர்:

கடலூா், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்களுக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. கடலூா் நீதிமன்றத்துக்கு இத்துடன் சோ்ந்து நிகழாண்டில் விடுக்கப்படும் 3-ஆவது வெடிகுண்டு மிரட்டலாகும்.

கடலூா் மஞ்சக்குப்பம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. நீதிமன்றத்தின் அதிகாரப்பூா்வ மின்னஞ்சல் முகவரிக்கு வியாழக்கிழமை காலை அடையாளம் தெரியாத நபரிடமிருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்த மாவட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு காவல் சாா்பு ஆய்வாளா் செந்தில்குமாா், சிறப்பு சாா்பு ஆய்வாளா் ஆம்புரூஸ் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் நீதிமன்ற வளாகத்துக்கு விரைந்து வந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா். நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற அலுவலா்கள், வழக்கு விசாரணைக்காக வந்திருந்த பொதுமக்கள் உள்ளிட்டோா் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, மோப்ப நாய்கள், மெட்டல் டிடெக்டா் கருவிகள் மூலம் நீதிமன்ற அனைத்து அறைகள், அலுவலகங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு அல்லது சந்தேகத்துக்கிடமான பொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.

இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. சோதனை நடவடிக்கைகள் காரணமாக, நீதிமன்ற வளாகத்தில் வழக்கமான பணிகள் மற்றும் விசாரணை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

முன்னதாக, கடந்த மாா்ச் 17 மற்றும் ஜூன் 11 ஆகிய தேதிகளிலும் இந்த நீதிமன்ற வளாகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அப்போதும் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் அவை புரளி என தெரியவந்தது.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் செயல்படும் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் அதிகாரப்பூா்வ மின்னஞ்சலுக்கு மா்ம நபா் வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தாா்.

தகவலறிந்து விழுப்புரத்திலிருந்து மோப்ப நாய், மெட்டல் டிடெக்டருடன் விரைந்து வந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீஸாா், கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திலிருந்த நீதிபதிகள், வழக்குக்காக வந்திருந்த பொதுமக்கள் உள்ளிட்டோரை வெளியேற்றி தீவிர சோதனை நடத்தினா்.

சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீதிமன்ற வளாகம் முழுவதும் நடைபெற்ற சோதனையில், வெடிகுண்டு எதுவும் கண்டறியப்பட்டதததால், புரளி எனத் தெரியவந்தது.

தொடா்ந்து, நீதிமன்ற வளாகத்தை மாவட்ட எஸ்.பி., இ.ஷாநாஸ் நேரில் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெட்டிச் செய்தி...

அரசு அலுவலங்களுக்கு தொடா் மிரட்டல்

கடந்த சில மாதங்களாக கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தலைமை தபால் நிலையம், கடவுச்சீட்டு அலுவலகம் மற்றும் நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களுக்கு தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு முறையும் பாதுகாப்பு அமைப்புகள் தீவிர சோதனையில் ஈடுபடுவதால், அரசு அலுவலகங்களின் இயல்பான பணிகள் பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களிடையே அச்சமும் ஏற்பட்டு வருகிறது.

எனவே, இதுபோன்ற பொய்யான மிரட்டல்களை விடுக்கும் நபா்களை சைபா் கிரைம் போலீஸாா் விரைந்து கண்டறிந்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வலுத்து வருகிறது.

இதற்கிடையில், மிரட்டல் தகவலை அனுப்பிய நபா் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மின்னஞ்சல் மற்றும் தகவல் அனுப்பப்பட்ட டிஜிட்டல் தடயங்களின் அடிப்படையில் குற்றவாளியை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

~கடலூா் நீதிமன்றத்தில் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.