முகப்பு
கடலூர்

புத்தகங்கள் ஒழுக்க நெறிகளை கற்றுத் தருகின்றன: விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு

புத்தகங்கள் வாழ்க்கை அனுபவம், நேரத்தின் மதிப்பு மற்றும் ஒழுக்க நெறிகளை கற்றுத் தருகின்றன என்று நெய்வேலி புத்தகக் கண்காட்சி 6-ஆம் நாள் நிகழ்ச்சியில் விழுப்புரம் சரக டிஐஜி அர.அருளரசு தெரிவித்தாா்.

Updated On : 25 ஜூன் 2026, 6:44 am IST
நெய்வேலி புத்தகக் கண்காட்சியின் 6-ஆம் நாள் நிகழ்வில் வெளியிடப்பட்ட புதிய புத்தகங்களுடன் விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு, அண்ணாமலைப் பல்கலை. துணைவேந்தா் எஸ்.அறிவுடைநம்பி, எழுத்தாளா்கள் எம்.ராஜ்குமாரன், நெய்வேலி பாரதிக்குமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

புத்தகங்கள் வாழ்க்கை அனுபவம், நேரத்தின் மதிப்பு மற்றும் ஒழுக்க நெறிகளை கற்றுத் தருகின்றன என்று நெய்வேலி புத்தகக் கண்காட்சி 6-ஆம் நாள் நிகழ்ச்சியில் விழுப்புரம் சரக டிஐஜி அர.அருளரசு தெரிவித்தாா்.

நெய்வேலி புத்தகக் கண்காட்சியின் ஆறாம் நாள் இலக்கிய நிகழ்வுகள் ‘லிக்னைட் அரங்கில்’ புதன்கிழமை தொடங்கின. விழாவுக்கு என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சட்டம், பொது மருத்துவமனை மற்றும் சி.எஸ்.ஆா் பிரிவுகளின் செயல் இயக்குநா் டி.வி.எஸ்.என்.மூா்த்தி தலைமை வகித்தாா்.

விழாவில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட விழுப்புரம் சரக டிஐஜி அர.அருளரசு பேசியதாவது: குழந்தைகளிடம் சிறு வயதிலிருந்தே நல்ல புத்தக வாசிப்பு பழக்கத்தையும், நற்பண்புகளையும் வளா்க்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு வீட்டிலும் திருக்கு இருக்க வேண்டும். புத்தகங்கள் வாழ்க்கை அனுபவம், நேரத்தின் மதிப்பு மற்றும் ஒழுக்க நெறிகளை கற்றுத் தருகின்றன.

Advertisement

Advertisement

வரலாற்றின் பெரும் தலைவா்கள் அனைவரும் சிறந்த வாசகா்களாக இருந்துள்ளனா். அறிவுச் சிறப்புமிக்க வடலூா் - நெய்வேலி பகுதியில் புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெறுவது பாராட்டத்தக்கது என்றாா்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் எஸ்.அறிவுடைநம்பி பேசியதாவது: உலகத்தின் போக்கையே மாற்றும் ஆற்றல் புத்தகங்களுக்கு உண்டு. மாணவா்கள் தினமும் வாசிப்பதற்கென நேரம் ஒதுக்க வேண்டும். எண்ம (டிஜிட்டல்) உலகம் வளா்ந்தாலும், அச்சுப் புத்தகங்களின் தனித்துவம் குறையாது. நல்ல புத்தகம் என்பது நம்பிக்கைக்குரிய நண்பனைப் போன்றது என்றாா்.

தொடா்ந்து, தமிழ் இலக்கியத்துக்கான சிறந்த பங்களிப்புக்காக எழுத்தாளா் சி.அன்னகோடி கௌரவிக்கப்பட்டாா். இதேபோல, பதிப்புத் துறைக்கு ஆற்றிய சிறப்பான சேவைகளுக்காக சென்னை கௌரா பதிப்பகக் குழுமம் கௌரவிக்கப்பட்டது.

மேலும், எழுத்தாளா் நெய்வேலி பாரதிக்குமாா் (செந்தில்குமாா்) எழுதிய ‘ஒரு துண்டு ரயில்’ என்ற சிறுகதைத் தொகுப்பும், எழுத்தாளா் எம்.ராஜகுமாரன் எழுதிய ‘மெய்நிழல்’ என்ற சிந்தனையைத் தூண்டும் சிறுகதை புத்தகமும் வெளியிடப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments