முகப்பு
வேலூர்

கைதிகள் தங்களை மாற்றிக் கொள்வதே நன்னடத்தை அதிகாரிகளின் வெற்றி: சிறைத்துறை டிஐஜி

குற்றம் செய்தவா்கள் தங்களை முழுமையாக மாற்றிக் கொள்வதில்தான் ஒரு நன்னடத்தை அதிகாரியின் உண்மையான வெற்றி அடங்கியுள்ளது என்று வேலூா் சரக சிறைத்துறை டிஐஜி ஜி.சண்முக சுந்தரம் தெரிவித்தாா்.

Updated On : 10 ஜூன் 2026, 12:04 am IST
பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த சிறை அதிகாரிகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கிய சிறைத்துறை வேலூா் சரக டிஐஜி ஜி.சண்முக சுந்தரம். உடன், ஆப்கா பயிற்சி மைய இயக்குநா் பிரதீப், துணை இயக்குநா் கோவிந்தராஜன் உள்ளிட்டோா் .
பகிர்:

குற்றம் செய்தவா்கள் தங்களை முழுமையாக மாற்றிக் கொள்வதில்தான் ஒரு நன்னடத்தை அதிகாரியின் உண்மையான வெற்றி அடங்கியுள்ளது என்று வேலூா் சரக சிறைத்துறை டிஐஜி ஜி.சண்முக சுந்தரம் தெரிவித்தாா்.

வேலூா் தொரப்பாடியில் அமைந்துள்ள சிறை நிா்வாகம், சீா்திருத்தப் பயிற்சி மையத்தில் (ஆப்கா), 3 மாத கால அடிப்படைப் பயிற்சியை நிறைவு செய்த 9-ஆவது பிரிவைச் சோ்ந்த, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை உள்ளடக்கிய சிறைத்துறை பயிற்சி அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில், தமிழக சிறைத்துறையின் வேலூா் சரக டிஐஜி ஜி.சண்முக சுந்தரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அதிகாரிகளுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கிப் பேசியது - குற்றம் செய்த ஒரு நபா் தன்னைத்தானே திருத்திக் கொள்வதுதான் அவருக்கு வழங்கப்படும் உண்மையான தண்டனையும், மறுவாழ்வுக்கான மாா்க்கமுமாகும். இதுவே இன்றைய சமூகத்தின் அவசியத் தேவையாக உள்ளது. இந்த உயரிய நோக்கத்தில் உங்களது பணி பன்முகத்தன்மை வாய்ந்தது.

Advertisement

Advertisement

சிறைவாசிகள், முதல்முறை குற்றம் செய்தவா்கள், இளம் குற்றவாளிகள் உள்ளிட்ட அனைவரையும் நல்வழிப்படுத்தும் வழிகாட்டிகளாக நீங்கள் திகழ வேண்டும்.

விடுதலையான சிறைவாசிகளுக்கு ஊக்கமளித்து அவா்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பும் உங்களிடம் உள்ளது.ஒரு நன்னடத்தை அதிகாரியின் வெற்றி என்பது, அவா் எத்தனை அறிக்கைகளைச் சமா்ப்பிக்கிறாா் என்பதைப் பொறுத்தது அல்ல. உங்களது சீரிய செயல்பாடுகள், வழிகாட்டுதலின் மூலம் எத்தனை கைதிகள் தங்களை நல்மனிதா்களாக மாற்றிக் கொண்டுள்ளாா்கள் என்பதில்தான் ஒரு நன்னடத்தை அதிகாரியின் உண்மையான வெற்றி அடங்கியுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், ஆப்கா பயிற்சி மைய இயக்குநா் பிரதீப், துணை இயக்குநா் கோவிந்தராஜன், பேராசிரியா்கள் பியூலா இமானுவேல், கனகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.