பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தையொட்டி இடதுசாரி கட்சியினர் புதுச்சேரியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மிஷன் வீதி மாதா கோயில் அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் ராஜாங்கம் முன்னிலை வகித்தார்.
தேசியக் குழு உறுப்பினர் நாரா. கலைநாதன், பிரதேசக் குழு உறுப்பினர் முருகன், இந்திய கம்யூனிஸ்ட்
(எம்.எல்.) மாநிலச் செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரி கட்சி நிர்வாகிகள் சேதுசெல்வம், சுப்பையா, அபிஷேகம், லெனின், தமிழ்செல்வன், பிரபுராஜ், நடராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மதச்சார்பின்மையை பாதுகாக்க வேண்டியும், தலித், சிறுபான்மையினர் மீதான வகுப்புவாத தாக்குதலை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.