மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், புதுவையில் மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் ஏரி மீன்களின் விலை உயர்ந்து வருகிறது.
கடலில் உள்ள மீன் வளத்தை காக்கவும், மீன்களின் இனப்பெருக்கத்துக்காகவும் ஆண்டுதோறும் 61 நாள்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.
அதன்படி, தமிழகம், புதுவையில் மீன்பிடி தடைக்காலம் திங்கள்கிழமை தொடங்கியது. புதுவை, காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை கடலுக்குள் சென்ற மீனவர்கள் நள்ளிரவிலேயே கரை திரும்பினர்.
புதுச்சேரியில் கிழக்கு கடற்கரை பகுதியான கனகசெட்டிக்குளம் முதல் மூர்த்திக்குப்பம் (18 மீனவ கிராமங்கள்) வரையும், காரைக்கால் பிரதேச கடல் பகுதியான மண்டபத்தூர் முதல் வடக்கு வாஞ்சூர் வரையிலான பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் திங்கள்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.
இதனால் அவர்களின் விசைப் படகுகள், அந்தந்த கிராமங்களின் கடற்கரையோர பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளதால் மீனவர்கள் பழுதடைந்த படகுகள் மற்றும் வலைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
ஜூன் 15-ஆம் தேதி வரை தடைக்காலம் அமலில் இருக்கும் என்று புதுவை மீன்வளத் துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் தேங்காய்திட்டு துறைமுகத்துவாரம் ஆழப்படுத்தும் பணியால் மீனவர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளதால் டீசல், மானியம், தடைக்கால நிவாரணம் உள்ளிட்ட சலுகைகளை கூடுதலாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
கிறிஸ்தவர்களின் தவக்காலம் ஏப்.20-ஆம் தேதி நிறைவுபெறுகிறது.
அதன்பிறகு மீன்களின் விலை உயரும். மீன்பிடிக்க தடை இருந்தாலும் 20 குதிரை திறனுக்கும் குறைவான கண்ணாடி இழை படகுகள் மூலம் குறைந்த தொலைவு சென்று மீனவர்கள் மீன்களை பிடித்து வருகின்றனர். மீன்வரத்து குறைந்த நிலையில் ஏரி மீன்களின் விலை புதுவையில் உயர்ந்துள்ளது.