புதுவை பல்கலைக்கழக அளவிலான யோகா போட்டியில் புதுச்சேரி ராஜீவ் காந்தி பொறியியல் கல்லூரி மாணவர் பத்மராஜ் முதலிடம் பிடித்தார்.
புதுவை பல்கலை. இணைப்பு கல்லூரிகளுக்கு இடையே ஆண்கள், மகளிர் யோகா போட்டிகள் புதுவை பல்கலைக்கழக விளையாட்டரங்கம், ராஜீவ் காந்தி உள்விளையாட்டரங்கம் ஆகிய இடங்களில்
ஜன. 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற்றன.
இந்தப் போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சூரிய நமஸ்காரம், கட்டாய ஆசனம், விருப்பு ஆசனம் ஆகிய பிரிவுகளில் தனி நபர் போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டது. இதில், ஆண்கள் பிரிவில் ராஜீவ் காந்தி பொறியியல் கல்லூரி மாணவர் பத்மராஜ் முதலிடம் பிடித்தார். ஜான் பால் கல்வியியல் கல்லூரி மாணவர் சுதர்சன் 2-ஆவது இடத்தையும், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி மாணவர் அபிலாஷ்
3-ஆவது இடத்தையும் பிடித்தனர்.
இதேபோல, மகளிர் பிரிவில் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மாணவி வசந்தரா முதலிடத்தையும், ஆச்சார்யா கலைக் கல்லூரி மாணவி சூர்யா 2-ஆவது இடத்தையும், போப் ஜான்குமார் கல்வியியல் கல்லூரி மாணவி பிரேமலதா 3-ஆவது இடத்தையும் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பல்கலை. விளையாட்டுத் துறை தலைவர் சுப்ரமணியம், இயக்குநர் சுல்தானா ஆகியோர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.
போட்டி ஏற்பாடுகளை விளையாட்டுத் துறை உதவி இயக்குநர்கள் சிவராமன், சந்திரசேகரன், உதவிப் பேராசிரியர்கள் திருமுருகன், முருகேசன் ஆகியோர்கள் செய்திருந்தனர். பரிசளிப்பு விழாவில் கல்லூரி விளையாட்டு இயக்குநர்கள் ஜேம்ஸ், புவியரசு, கிளாரா, யோகா ஆசிரியர் தசரதன், சபரிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.