சொசைட்டிக் கல்லூரி ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தல்
அரசு சொசைட்டிக் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் போராட்டத்தை மாநில அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என இடதுசாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அரசு சொசைட்டிக் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் போராட்டத்தை மாநில அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என இடதுசாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநிலச் செயலாளர் அ.மு. சலீம் வெளியிட்ட அறிக்கை:
7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் அரசுக் கல்லூரிகளுக்கு மட்டும் நிறைவேற்றப்படும் என்றும், சொசைட்டி கல்லூரிகளுக்கு நிறைவேற்றப்படாது என்றும் அரசு முடிவெடுத்திருப்பது பாரபட்சமான செயலாகும்.
பணியில் சேர்க்கும் போது மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு ஆகிய அமைப்புகளின் பரிந்துரைகளின்படி ஊதியம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு, பணியில் சேர்ந்த பிறகு ஊதிய உயர்வு இல்லை என்று அரசு கூறுவது நியாயமற்றது. இதனால், சொசைட்டிக் கல்லூரி ஆசிரியர்கள், பணியாளர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருப்பது மாணவ சமுதாயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, புதுவை மாநில அரசு உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு போராட்டக் குழுவினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் ஆர். ராஜாங்கம் வெளியிட்ட அறிக்கை:
புதுவை அரசின் கீழ் செயல்பட்டு வரும் 18 அரசு சொசைட்டி கல்லூரி ஆரியர்கள், இதர ஊழியர்கள் 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த அரசிடம் பலமுறை வலியுறுத்தியும், அரசு தகுந்த நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததின் காரணமாக மேற்படி நிறுவனங்களில் உள்ள 4,000 அதிகமான ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் கடந்த 3 நாள்களாக பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
ஆசிரியர்கள், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஊதிய உயர்வு உள்ளிட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.