சயின்ஸ் ஒலிம்பியாட் பவுண்டேஷன் சார்பில் நடத்தப்பட்ட சர்வதேச ஆங்கில புலமை மேம்படுத்தும் திறன் தேர்வில் புதுவையைச் சேர்ந்த இரு மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்றனர்.
சயின்ஸ் ஒலிம்பியாட் பவுண்டேஷன் சார்பில் ஆண்டுதோறும் பொது அறிவு புலமையை மேம்படுத்தும் தேர்வு நடத்தப்படுகிறது. நிகழாண்டு நடைபெற்ற தேர்வில் 30 நாடுகளில் இருந்து 50 ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 50 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். புதுவையில் இருந்து 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இவர்களில், புதுச்சேரி ப்ரீனி ப்ளூம்ஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர் திஷ்ந்த் பொது அறிவு போட்டியில் சர்வதேச அளவில் முதலிடம் பெற்றார்.
மேலும், கணிதத் தேர்வில் ப்ளு ஸ்டார் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர் டி.ஹரிஹரன் தங்கப் பதக்கம் வென்றார். தேர்வில் வென்ற இரு மாணவர்களுக்கும் தலா
ரூ. 50 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. இந்தத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் விழா தில்லியில் விரைவில் நடைபெற உள்ளது. நிகழ்வில் முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று
பரிசுகளை வழங்க உள்ளார்.
இதுகுறித்து சயின்ஸ் ஒலிம்பியாட் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் மகபீர் சிங் கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள 6,300 பள்ளிகளில் பயிலும் 61 ஆயிரம் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான இடங்களை பெற்றனர். இது தவிர 8 லட்சம் மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.
மேலும், மாணவ - மாணவிகளுக்கு சிறந்த முறையில் கல்வி போதித்த 2 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
வருகிற கல்வியாண்டு முதல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு வர்த்தப் பாடப் பிரிவுக்கான ஒலிம்பியாட் தேர்வு நடத்தப்படும் என்றார் அவர்.