வில்லியனூர் அருகே மூதாட்டி மீது வேன் மோதியதில் அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
சேதராப்பட்டு பழைய காலனி பகுதியைச் சேர்ந்த கண்ணு மனைவி அய்யம்மாள் (75). இவர், கடந்த 2 ஆண்டுகளாக வில்லியனூர் அருகே கூடப்பாக்கம் கொள்ளிவேளித் தெருவைச் சேர்ந்த தனது மகள் கன்னியம்மாள் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை வீட்டு வாயிலில் அவர் நின்று கொண்டிருந்த போது, பின்புறமாக வந்த மினி வேன் அவர் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து புதுச்சேரி தெற்கு போக்குவரத்துப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
பிளேடால் காயம்: முதியவர் பலி
புதுச்சேரி, ஜூன் 7: நோயின் கொடுமையால் தன்னைத் தானே பிளேடால் உடலைக் காயப்படுத்திக் கொண்ட முதியவர் உயிரிழந்தார்.
புதுவை மாநிலம், கன்னியக்கோயில் அருகே உள்ள மதிகிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (65). கூலித் தொழிலாளி. இவர், கை, கால் வீக்க நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதன் காரணமாக வலியால் அவதிப்பட்டு வந்த தர்மலிங்கம், கடந்த 3 -ஆம் தேதி எலி மருந்தைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இந்த நிலையில், அவர் காப்பாற்றப்பட்டார்.
இதனால் மனமுடைந்த அவர், பிளேடால் தன்னைத் தானே உடலில் பல இடங்களில் அறுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.