புதுச்சேரி: வாக்குரிமையை யாருக்கும் விற்பதில்லை என்ற உறுதியுடன் மக்கள் செயல்பட வேண்டும் என புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இந்தப் பேரவையின் 89 ஆவது சிந்தனையரங்கம் புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்றது. பேரவையின் தலைவர் கோ. செல்வம் தலைமை வகித்தார். சிறப்புத் தலைவர் இ. பட்டாபிராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில் "உணவுப் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு' என்ற தலைப்பில் புதுவை அரசு உணவுப் பாதுகாப்பு அலுவலர் எம். ரவிச்சந்திரன் கருத்துரை நிகழ்த்தினார். தொடர்ந்து, "அறன் வலியுறுத்தல்' என்ற தலைப்பில் பைரவி தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.
இதில், மக்களவைத் தேர்தல், பேரவை இடைத் தேர்தலில் புதுவை மாநிலத்தில் 100 சதவீத வாக்களிப்பை அனைவரும் உறுதி செய்ய வேண்டும், எந்தக் காரணம் கொண்டும் நமது வாக்குரிமையை யாருக்கும் விற்பதில்லை என்ற உறுதியுடன் மக்கள் செயல்பட வேண்டும், தேர்தலை காரணம் காட்டி மக்கள் நலப் பணியில் தொய்வு ஏற்படாமல் மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.