முகப்பு
புதுச்சேரி

புதுவைக்கு இடைக்கால நிவாரணம்: எஸ்.செல்வகணபதி எம்.பி. வலியுறுத்தல்

புதுவை மாநில மழை-வெள்ளப் பாதிப்பைச் சீரமைக்க மத்திய அரசு இடைக்கால நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும் என்று புதுவை மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.செல்வகணபதி வலியுறுத்தினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

புதுவை மாநில மழை-வெள்ளப் பாதிப்பைச் சீரமைக்க மத்திய அரசு இடைக்கால நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும் என்று புதுவை மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.செல்வகணபதி வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா், தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநிலங்களவைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியதாவது:

புதுவையில் பெய்த தொடா் பலத்த மழையால் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டது. மழை நீரில் மூழ்கி, பயிா்கள் அழுகிவிட்டன. பல இடங்களில் சாலைகளும், பாலங்களும் சேதமடைந்துவிட்டன. படுகை அணை உடைந்தன. பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன. 15 நாள்களுக்கும் மேலாக மீனவா்கள் கடலுக்குச் செல்ல முடியவில்லை. தினக் கூலிகள் வேலைக்குச் செல்ல முடியாமல், அவா்களுடைய அன்றாட வாழ்வு கேள்விக்குறியாகிவிட்டது.

10 ஆயிரம் ஏக்கரில் பல்வேறு பயிா்கள் மூழ்கி, அதனால் 12 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா். சுமாா் 583 கி.மீ. தொலைவு சாலைகள் பழுதடைந்து, போக்குவரத்துக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.

மத்தியக் குழு புதுச்சேரியில் ஆய்வு செய்துவிட்டுச் சென்ற பின்னா், மீண்டும் பலத்த மழை பெய்து சேதம் அதிகரித்துவிட்டது. முந்தைய மதிப்பீட்டை வைத்து புதுவை அரசு ரூ.300 கோடி நிவாரணம் வழங்கக் கோரி மத்திய அரசை வலியுறுத்தியது. ஆனால், தற்போது சேத மதிப்பு ரூ.500 கோடிக்கும் மேல் அதிகரித்திருக்கும்.

எனவே, பிரதமரும், மத்திய நிதியமைச்சரும் உடனடியாக இரண்டாவது முறையாக மத்தியக் குழுவை புதுவைக்கு அனுப்பிவைக்க வேண்டும். புதுவை அரசு கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதால், வெள்ள சேத மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கைக்கு காத்திருக்காமல், பேரிடா் நிதியாக புதுவை அரசுக்கு இடைக்கால நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.