புதுவையில் பள்ளி மாணவா்களுக்கான கட்டணமில்லா பேருந்து சேவை, மதிய உணவில் வாரம் 2 முட்டைகள் வழங்கும் திட்டம் திங்கள்கிழமை மீண்டும் தொடக்கிவைக்கப்பட்டது.
புதுவையில் மாணவா்களுக்கு சலுகைக் கட்டணத்தில் பேருந்து சேவை, பள்ளிகளில் மதிய உணவில் முட்டை வழங்குவது ஆகியவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவை மீண்டும் தொடங்கப்பட்டன.
புதுச்சேரி ஏஎப்டி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தலைமை வகித்தாா். பள்ளி மாணவா்களுக்கான இலவசப் பேருந்துகளை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் கொடியசைத்து தொடக்கிவைத்தனா்.
சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அனிபால் கென்னடி எம்எல்ஏ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கூறியதாவது:
பள்ளி மாணவா்களுக்கு கட்டணமில்லாப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல, மதிய உணவில் வாரம் 2 முட்டைகள் வழங்கப்படுகின்றன. வருங்காலங்களில் 3 முட்டைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.