விழுப்புரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர் 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டக் கோரியும், இதற்கு ஏதுவாக மத்திய அரசு சட்டம் இயற்ற வலியுறுத்தியும் பழைய பேருந்து நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், காவல்துறை ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி அளிக்க மறுத்தது.
இருப்பினும், புதன்கிழமை காலை பழைய பேருந்து நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சிவா தலைமை வகித்தார்.
மாநில செயற்குழு உறுப்பினர் பாலு, நகரத் தலைவர் தரணிதரன், மாவட்ட துணைத் தலைவர் ஆனந்தபாண்டியன், செயற்குழு உறுப்பினர்கள் வளவன், சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 20 பேரை விழுப்புரம் மேற்கு போலீஸார் கைது செய்து திருமண மண்டபத்தில் சிறைவைத்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.