ஆவின் பால் கலப்பட வழக்கில் வாகன ஒப்பந்ததாரர் வைத்தியநாதன் உள்பட 23 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகினர். 3 பேர் ஆஜராகாததால், விசாரணை மே 23-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த ஊரல் கிராமத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 19-ஆம் தேதி ஆவின் டேங்கர் லாரியில் கொண்டு வரப்பட்ட பாலில் தண்ணீரை ஊற்றி கலப்படம் செய்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த வாகன ஒப்பந்ததாரர் வைத்தியநாதன் உள்பட 19 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கைது செய்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். மேலும், இந்த வழக்கில் வைத்தியநாதனின் மனைவி ரேவதி உள்பட 7 பேரையும் கூடுதலாக சேர்த்து போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், விழுப்புரம் நீதிமன்றத்தில் புதன்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வைத்தியநாதன், அவரது மனைவி ரேவதி உள்பட 23 பேர் ஆஜராகினர். ஓட்டுநர் தினகரன் உள்பட 3 பேர் ஆஜராகவில்லை. இதையடுத்து, நீதிபதி அருணாசலம், விசாரணையை வருகிற 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.