திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றில் பெருக்கெடுத்தோடிய அணை நீர் வியாழக்கிழமை படிப்படியாக குறைந்தது.
திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூரில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே அணை உள்ளது. இந்த அணையில் இருந்து செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தென்பெண்ணையாற்றில் புதன்கிழமை தண்ணீர் பெருக்கெடுத்தோடியது. இதனால், திருக்கோவிலூர் ஆற்றுத் தரைப்பாலத்தில் புதன்கிழமை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது. அணை நீர் வரத்து படிப்படியாக குறைந்து காணப்பட்டதையடுத்து, வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை ஆற்று தரைப்பாலத்தில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. பின், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வியாழக்கிழமை இரவு மீண்டும் ஆற்று தரைப்பாலத்தில் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டது. போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.