விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற சாலை விபத்தில் இரு சக்கர வாகனம் தீப்பற்றி எரிந்து. இந்த விபத்தில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம், வேப்பூரை அடுத்த பெரிய நெசலூரைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் கருப்பையா(23). இவர், திங்கள்கிழமை இரவு வேப்பூரில் இருந்து சென்னைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
விழுப்புரம் அருகே பிடாகம் பகுதியில் சென்றபோது, இரு சக்கர வாகனம், முன்னால் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தில் மோதியது. இதில் இரு சக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. உடனே, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கருப்பையா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சடலத்தை விழுப்புரம் தாலுகா போலீஸார், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.