விழுப்புரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள், ரூ.2.75 லட்சம் ரொக்கத்தை திங்கள்கிழமை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டியை அடுத்த ஆசூர் கங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் காத்தவராயன் மனைவி அனுசுயா(75). இவருக்கு 6 மகன்கள். அனைவரும் வெளியூரில் வசிக்கின்றனர். அனுசுயா மட்டும் இங்குள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
உடல் நலம் சரியில்லாத அனுசுயா, செஞ்சியில் உள்ள தனது 2-ஆவது மகன் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று தங்கினார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு, அனுசுயா வீட்டின் பின்பக்கக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர், பீரோவை உடைத்து, அதில் இருந்த 30 பவுன் நகைகள், ரூ.2 லட்சத்து 76 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர். திருடு போன நகைகள், ரொக்கத்தின் மதிப்பு சுமார் ரூ.11 லட்சம் இருக்கும்.
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் டி.எஸ்.பி. சங்கர், விக்கிரவாண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மருது ஆகியோர், திருட்டு சம்பவம் நடந்த வீட்டை நேரில் பார்வையிட்டு விசாரித்தனர். விரல் ரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.