ஆரோவில் அருகே காலாவதியான நூடுல்ஸ் பாக்கெட்டுகளைத் தின்ற 6 மாடுகள் உயிரிழந்தன. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே மொரட்டாண்டி பகுதியைச் சேர்ந்த தாமோதரன் மகன் தேவேந்திரன்((24). இவர், மாடுகளை வைத்து பால் கறவை செய்து, வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் 10-க்கும் மேற்பட்ட மாடுகள் இருந்தன.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கம்போல, மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிவைத்தார். ஆனால், மாலை வரை மாடுகள் வீட்டுக்கு திரும்பவில்லையாம். இதனால், சந்தேகமடைந்த தேவேந்திரன் மாடுகளை தேடிச் சென்றார்.
அப்போது, அதே பகுதியில் உள்ள கோயில் அருகே தேவேந்திரனின் 4 மாடுகள் உள்பட 6 மாடுகள் இறந்து கிடந்தன. அருகே காலாவதியான நூடுல்ஸ் பாக்கெட்டுகள் கொட்டிக்கிடந்துள்ளன. அந்த உணவுப்பொருள்களை தின்று மாடுகள் இறந்திருக்கலாம் என்று அவர் சந்தேகமடைந்தார்.
இது குறித்து ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரு நூடூல் தயாரிப்பு தொழிற்சாலையிலிருந்து கொட்டிச் சென்ற காலாவதியான உணவுப் பொருள்களை மாடுகள் தின்று உயிரிழந்துள்ளன. ஆகையால், அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, உயிரிழந்த மாடுகளை, கால்நடைத் துறை மருத்துவர்கள், மாடுகளை உடல் கூறாய்வு செய்தனர்.