விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி, தொகுதியின் முக்கியச் சாலைகளில் போலீஸார் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்புப் பணியைத் தொடங்கியுள்ளனர்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்.21-ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கட்சியினர் பிரசாரத்தை தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் விதிமீறல்களைத் தடுக்கும் வகையிலும், மதுக் கடத்தல் போன்றவற்றை கண்காணிக்கவும், சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைத்து போலீஸார் கண்காணிப்பு பணியைத் தொடங்கிவிட்டனர்.
தொகுதிக்கு உள்பட்ட, திருக்கனூர்-விழுப்புரம் நெடுஞ்சாலையில் மதுரபாக்கம் பகுதியில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு சனிக்கிழமை முதல் செயல்படுகிறது. அங்கு ஒரு உதவி ஆய்வாளர், மூன்று காவலர்கள் பணியில் உள்ளனர். இதேபோன்று, விழுப்புரம்-திருக்கோவிலூர் சாலையில், மாம்பழப்பட்டு பகுதியில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், விழுப்புரம்-திருவண்ணாமலை நெடுஞ்சாலையில், கெடார் அருகே சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணி தொடங்கி நடைபெறுகிறது.மதுபானங்கள் கடத்தல், வாக்காளர்களுக்கான பரிசுப் பொருள்கள், பணப் பரிமாற்றம் தொடர்பான விதிமீறல்களை தடுக்கும் வதையில், போலீஸார் வாகனங்களை சோதனையிட்டு வருகின்றனர். தேர்தல் முடிவும் வரை சோதனைச் சாவடிகள் இயங்கும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தெரிவித்தார்.