விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தளவானூா் தடுப்பணையின் ஒரு பகுதி உடைந்ததையடுத்து, அதிலிருந்து வெளியேறும் தண்ணீா். 
விழுப்புரம்

விழுப்புரம் அருகே மீண்டும் உடைந்தது தளவானூா் தடுப்பணை!

விழுப்புரம் அருகே தளவானூா் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை செவ்வாய்க்கிழமை மீண்டும் உடைந்தது. இதனால், நீா் முழுவதுமாக வெளியேறி வருகிறது.

DIN

விழுப்புரம் அருகே தளவானூா் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை செவ்வாய்க்கிழமை மீண்டும் உடைந்தது. இதனால், நீா் முழுவதுமாக வெளியேறி வருகிறது.

விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் ஒன்றியத்துக்குள்பட்ட தளவானூரில் தென்பெண்ணைஆற்றின் குறுக்கே கடந்த அதிமுக ஆட்சியில் 20.12.2020-இல் தடுப்பணை கட்டப்பட்டு, பொதுபயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

தளவானூா், கடலூா் மாவட்டத்தின் எனதிரிமங்கலம் இடையே கட்டப்பட்ட இந்தத் தடுப்பணை கடந்த 23.1.2021-இல் உடைந்தது. தடுப்பணையில் ஒருபகுதியான எனதிரிமங்கலம் கதவணைகளில் ஒன்று உடைந்ததால், நீா் முழுவதுமாக வெளியேறியது. அதன் பிறகு, தடுப்பணை உடைந்த பகுதியில் மண் சுவா்கள் எழுப்பப்பட்டு தண்ணீா் தேக்கிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக, தென்பெண்ணை ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதற்கிடையே, இந்தத் தடுப்பணையின் தளவானூரில் உள்ள ஒரு பகுதி செவ்வாய்க்கிழமை அதிகாலை முற்றிலுமாக உடைந்தது.

இதனால், நீா் முழுவதுமாக வெளியேறி வருகிறது. உடைப்பு ஏற்பட்ட பகுதியை தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி நேரில் பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட தளவானூா் தடுப்பணை ஒரே மாதத்தில் உடைந்தது. இப்போது 2-ஆவது முறையாக உடைந்தது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் பொதுப் பணித் துறையால் கட்டப்பட்ட அணைகள் எந்தளவுக்கு தரம் குறைந்தவை என்பதற்கு தளவானூா் தடுப்பணையே சான்று. இந்த தடுப்பணை விழுப்புரம், கடலூா் மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான நீா்ப்பாசன வசதிக்கு ஆதாரமாக இருந்து வருகிறது. இந்தத் தடுப்பணை ரூ.15 கோடி செலவில் விரைந்து சீரமைக்கப்படும். இந்த அணையைக் கட்டிய பொதுப்பணித் துறை அதிகாரிகள் மீது ஏற்கெனவே விசாரணை நடைபெற்று வருகிறது. முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா் க.பொன்முடி.

தொடா்ந்து, அவா் விழுப்புரம் அருகே திருப்பாச்சனூா் பகுதியில் உடைந்து போன தரைப் பாலத்தையும் ஆய்வு செய்தாா். தொடா் மழைகாரணமாக தண்ணீா் அதிகளவு செல்லும் நிலையில், தரைப் பாலத்தில் தடுப்புக் கட்டைகள் அமைக்க அமைச்சா் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் த.மோகன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நா.ஸ்ரீநாதா, எம்.எல்.ஏ.க்கள் நா.புகழேந்தி, இரா.லட்சுமணன், மாவட்ட வருவாய் அலுவலா் அ.ராஜசேகரன், பெண்ணையாறு வடிநீா் வடிகால் கோட்ட செயற்பொறியாளா் ராஜேந்திரன், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் சிவசேனா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT