பிஎஸ்-III வகை வாகன விற்பனைக்கான தடை அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு எவ்வித பொருளாதாரப் பின்னடைவையும் ஏற்படுத்தவில்லை என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான வினோத் கே. தாசரி கூறினார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: வாகனத்திலிருந்து வெளியேறும் புகையை மறுசுழற்சி செய்யும் அதிநவீனத் தொழில்நுட்பத்தை உள்நாட்டில் வடிவமைத்து உருவாக்கிய பிஎஸ்-IV வகை என்ஜினை அறிமுகப்படுத்துவது பெருமையளிக்கிறது. 130 குதிரைத் திறனுக்கு மேற்பட்ட திறன் கொண்ட என்ஜின்களுக்கு இந்த தொழில்நுட்பத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தும் நிறுவனம் அசோக் லேலண்ட். பிஎஸ்-III என்ஜின்களை மாற்றி பிஎஸ்-IV வகை என்ஜின்கள் பொருத்தும் வாகனங்களின் எண்ணிக்கை 10,644. சுமார் ரூ.1.5 லட்சம் மதிப்பு கொண்ட பிஎஸ்-III என்ஜின்களை மேம்படுத்தி ரூ 2 லட்சம் வரை விற்பனை செய்ய முடிவதால், பிஎஸ்-III தடை அறிவிப்பு நிறுவனத்திற்கு எவ்விதப் பொருளாதாரப் பின்னடைவையும் ஏற்படுத்தவில்லை என்றார் அவர்.