இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் குறுகிய ஏற்றத்துடன் முடிவடைந்தது.
18 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பணவீக்கம், தொழில்துறை உற்பத்தி உள்ளிட்ட மத்திய அரசின் பொருளாதார புள்ளிவிவரங்கள் வெள்ளிக்கிழமை வெளியாகவிருப்பது குறித்த எதிர்பார்ப்பின் காரணமாகவும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாகவே காணப்பட்டது.
இருப்பினும், பிற்பகல் வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் ஓரளவுக்கு ஆர்வம் காட்டியதையடுத்து பங்கு வியாபாரம் சரிவிலிருந்து மீண்டு குறுகிய அளவில் ஏற்றத்தைக் கண்டது.
மும்பை பங்குச் சந்தையில், எரிசக்தி, தொலைத்தொடர்பு, எண்ணெய்-எரிவாயு துறை குறியீட்டெண்கள் 1.11 சதவீதம் வரை உயர்ந்தன. அதேசமயம், உலோகம், தகவல் தொழில்நுட்ப துறை குறியீட்டெண்கள் 1.18 சதவீதம் வரை இறக்கத்தைக் சந்தித்தன. பார்தி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ, ஹெச்யுஎல், என்டிபிசி, ஓஎன்ஜிசி, ஐடிசி மற்றும் ஏஷியன் பெயின்ட்ஸ் பங்குகளின் விலை 2.19 சதவீதம் வரை உயர்ந்தன.
அதேசமயம், வேதாந்தா பங்கின் விலை 3.72 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. இது தவிர, ஆக்ஸிஸ் வங்கி, சன் பார்மா, இன்ஃபோசிஸ், பவர் கிரிட், ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக், டாடா ஸ்டீல், கோட்டக் வங்கி, ஹெச்டிஎஃப்சி, இன்டஸ்இண்ட் வங்கி மற்றும் மாருதி சுஸுகி பங்குகளின் விலை 1.46 சதவீதம் வரை குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 21 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 38,607 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 12 புள்ளிகள் அதிகரித்து 11,596 புள்ளிகளில் நிலைத்தது.