பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) 59 நிமிடங்களில் சில்லறை கடன் பெறும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பலன் பெறும் வகையில் 59 நிமிடங்களில் கடன் பெறும் வசதியை மத்திய அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தியது. இதற்காக, www.psbloansin59minutes.com என்ற வலைதளம் நிதி சேவைகள் துறையின் கீழ் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வலைதளத்தில் மிக முனைப்புடன் பங்கெடுத்து குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.5 கோடி வரையிலான கடன்களை வங்கி விரைவாக வழங்கி வருகிறது.
இந்த நிலையில் தற்போது, வீட்டு வசதி கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட சில்லறை கடன் வசதியையும் அந்த வலைதளத்தின் மூலம் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம், சில்லறை கடன் வேண்டுவோர் எளிதாகவும், வேகமாகவும் கடன் பெற்று பலனடைய முடியும் என அந்த அறிக்கையில் ஐஓபி தெரிவித்துள்ளது.