தனியார் துறையைச் சேர்ந்த கோட்டக் மஹிந்திரா வங்கியிலிருந்து ஐஎன்ஜி குழுமம் தனது பங்குகள் முழுவதையும் விற்று வெளியேறியுள்ளது.
இதுகுறித்து கோட்டக் மஹிந்திரா வங்கி தெரிவித்துள்ளதாவது:
கோட்டக் மஹிந்திரா வங்கியில் ஐஎன்ஜி குழுமம் இறுதியாக 1.20 சதவீத பங்கு மூலதனத்தை வைத்திருந்தது. தற்போது, அந்த பங்குகள் முழுவதையும் ஐஎன்ஜி விற்பனை செய்து விட்டது. இதையடுத்து, கோட்டக் மஹிந்திரா வங்கியிலிருந்து ஐஎன்ஜி குழுமம் முழுமையாக வெளியேறி விட்டது என அந்த வங்கி தெரிவித்துள்ளது.
இந்த பங்கு விற்பனையைத் தொடர்ந்து, ஐஎன்ஜி குழுமத்தின்சார்பில் கோட்டக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக குழுவில் இடம்பெற்றிருந்த செயல்சாரா இயக்குநர் மார்க் நியூமான் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். இதுகுறித்த தகவலை அவர் பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி-யிடம் தெரிவித்துள்ளார்.
ஐஎன்ஜி குழுமத்தின் அங்கமாக இருந்த ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை கோட்டக் மஹிந்திரா வங்கியுடன் இணைத்தது. கடந்த 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற இந்த இணைப்பு நடவடிக்கைக்குப் பிறகு கோட்டக் மஹிந்திரா வங்கியில் ஐஎன்ஜி குழுமம் 6.5 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டிருந்தது.
பின்னர், அதிலிருந்த தனது பங்குகளை ஐஎன்ஜி குழுமம் படிப்படியாக விற்பனை செய்து வந்தது.
இந்த நிலையில், தற்போது இறுதியாக தன் வசம் இருந்த பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் ஐஎன்ஜி குழுமத்துக்கு ரூ.2,800 கோடி கிடைத்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.