தனியார் துறையைச் சேர்ந்த ஃபெடரல் வங்கியின் முதல் காலாண்டு லாபம் 46 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த வங்கி செபியிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.3,620.82 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.2,938.24 கோடியாக காணப்பட்டது. குறிப்பாக, வட்டி வருவாய் ரூ.2,667.38 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.3,229.30 கோடியானது. நிகர லாபம் ரூ.262.71 கோடியிலிருந்து 46 சதவீதம் அதிகரித்து ரூ.384.21 கோடியானது. வாராக் கடன் குறைந்ததையடுத்து லாபம் சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது.
கடந்த 2018 ஜூன் 30 நிலவரப்படி 3 சதவீதமாக காணப்பட்ட மொத்த வாராக் கடன் விகிதம் நடப்பாண்டில் இதே கால அளவில் 2.99 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோன்று, நிகர அளவிலான வாரக் கடனும் 1.72 சதவீதத்திலிருந்து 1.49 சதவீதமாக சரிந்துள்ளது. வாராக் கடன் குறைந்ததையடுத்து அதற்கான ஒதுக்கீடு ரூ.199.15 கோடியிலிருந்து ரூ.192.04 கோடியானது என செபியிடம் ஃபெடரல் வங்கி தெரிவித்துள்ளது.