சென்னை: மத்திய அரசுக்கு முன்னுரிமை பங்குகளை வெளியிடுவதன் மூலமாக இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) ரூ.4,100 கோடி மூலதனத்தை திரட்டவுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
மத்திய அரசுக்கு முன்னுரிமை பங்குகளை ஒதுக்கீடு செய்து மூலதனத்தை திரட்ட ஐஓபி முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதல் பங்குதாரா்களிடமிருந்து சிறப்பு பொதுக் குழு கூட்டம் வாயிலாக பெறப்பட்டுள்ளது.
இந்த முன்னுரிமை பங்கு வெளியீட்டில் மத்திய அரசுக்கு மொத்தம் 246,54,23,932 பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன. பங்கு ஒன்றின் விலை ரூ.16.63 என்பதன் அடிப்படையில் இந்த வெளியீட்டின் மூலமாக ஐஓபி ரூ.4,100 கோடி மூலதனத்தை திரட்டிக் கொள்ளவுள்ளது. இந்த மொத்த தொகையில் ரூ.2,465.42 கோடி பங்கு மூலதன கணக்கிலும், ரூ.1,634.58 கோடி பங்கு பிரீமியம் கணக்கிலும் வரவு வைக்கப்படும்.
இந்த முன்னுரிமை பங்கு வெளியீட்டையடுத்து வங்கியில் மத்திய அரசின் பங்கு மூலதனம் 95.84 சதவீதத்திலிருந்து 96.38 சதவீதமாக அதிகரிக்கும் என இந்தியன் ஓவா்சீஸ் வங்கி தெரிவித்துள்ளது.