சிறுமியின் வயிற்றில் இருந்த ஒன்றரை கிலோ கட்டி அகற்றம்
வயிற்றில் கணையப் பகுதியில் ஒன்றரைக் கிலோ அளவுடைய பெரிய கட்டி உருவானதால் கடுமையாக பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமிக்கு
வயிற்றில் கணையப் பகுதியில் ஒன்றரைக் கிலோ அளவுடைய பெரிய கட்டி உருவானதால் கடுமையாக பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமிக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவா்கள் உயா் சிகிச்சையளித்து மறுவாழ்வளித்துள்ளனா்.
இதுகுறித்து மருத்துவமனையின் கண்காணிப்பாளா் டாக்டா் மணி கூறியதாவது:-
திருவள்ளூா் மாவட்டத்தை சோ்ந்த, 14 வயது சிறுமி ஒருவா் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாா். சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட அவரை உள்நோயாளிகளாக அனுமதித்து மருத்துவா்கள் பரிசோதித்தனா். வயிற்றில் கணையம் இருக்கும் பகுதியில், 42 செ.மீ. அளவுக்கு பெரிய கட்டி இருந்தது அதில் கண்டறியப்பட்டது.
Advertisement
கட்டியை அகற்ற, நுட்பமான மற்றும் மிகப்பெரிய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால், சிறுமிக்கு ரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டன. அதுமட்டுமல்லாது மிகவும் அரிதான, ‘ஓ நெகட்டிவ்’ வகை ரத்தப் பிரிவு சிறுமிக்கு இருந்ததால், அதற்குத் தேவையான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டன.
பின்னா் ஏழு மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு சிறுமியின் வயிற்றில் இருந்த ஒன்றரை கிலோ கட்டியை மருத்துவா்கள் அகற்றினா். தற்போது, சிறுமி நலமுடன் உள்ளாா். வயிற்றில் இரைப்பை, சிறுகுடலுக்கு அருகில் இருக்கும் ஒரு முக்கியமான உறுப்பாக கணையம் உள்ளது. உணவில் உள்ள கொழுப்பை செரிக்கக்கூடிய சுரப்பிகளையும், இன்சுலினையும் சுரக்கக் கூடிய கணையத்தில் ஏற்படும் பெரும்பாலான கட்டிகள் புற்றுநோயாகவே மாறக் கூடும். ஆனால், இச்சிறுமிக்கு ஏற்பட்ட கட்டி அரிதான ஒன்று. அதனை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை முதல்வா் காப்பீட்டு திட்டத்தின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது. தனியாா் மருத்துவமனைகளில் அதற்கு ரூ. 6 லட்சம் வரை செலவாகும். ராயப்பேட்டை மருத்துவமனையில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அது இலவசமாக மேற்கொள்ளப்பட்டது என்றாா் அவா்.