சமூகத்துக்காக திருமணம் செய்யக்கூடாது: த்ரிஷா
அன்பின் காரணமாகத்தான் ஒருவரைத் திருமணம் செய்யவேண்டும். வேறு காரணங்களுக்காக அல்ல...
நடிகை த்ரிஷாவுக்கும், படஅதிபர் வருண்மணியனுக்கும் இடையே நடப்பதாக இருந்த திருமணம் எதிர்பாராதவிதமாக ரத்தானது. அதன்பிறகு நடிப்பில் பிஸியாகிவிட்டார் த்ரிஷா. கைவசம் ஏராளமான படங்கள்.
கவலைகளை மறந்து நடிப்பில் மும்முரமானது எப்படி? திருமணம் ரத்தானது ஏன் போன்ற கேள்விகளுக்கு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
திருமணம் ரத்து போன்ற ஒரு நிலை ஏற்பட்டால் பலரும் வருத்தத்தில் இருப்பார்கள். ஆனால் நான் அவ்வளவு சுலபமாகப் பாதிக்கப்பட மாட்டேன். நான் நேர்மறை எண்ணங்களுடன் வாழ்பவள். மனதும் மூளையும் என்ன சொல்கிறதோ அதன்படி முடிவுகளை எடுப்பவள்.
Advertisement
என் திருமணம் ரத்தானது குறித்து வந்த வதந்திகளை நான் கண்டுகொள்ளவில்லை. என் அம்மா மட்டுமே என் வாழ்க்கையின் முக்கியமான நபர். வேறு யாருக்கும் நான் பதில் சொல்லத் தேவையில்லை. ஒருநாள் நிச்சயம் செய்துவிட்டு அடுத்தநாள் அது ரத்தானதால் மக்கள் குழப்பமடைந்து பலவற்றையும் ஊகிக்கத்தான் செய்வார்கள்.
என்னால் இந்தப் பிரிவைப் பற்றி நிறைய சொல்லமுடியும். அதைப் பற்றி பேசவேண்டாம் என்றும் நினைக்கவில்லை. ஆனால் இதில் பலர் சம்பந்தப்பட்டுள்ளார்கள். அவர்களை இந்தப் பிரச்னைக்குள் இழுக்க விரும்பவில்லை. இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கடந்தகாலத்தை நினைக்க விரும்பவில்லை.
இப்போதும் திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. சமூகத் தேவைக்காக திருமணம் செய்யவேண்டும் என்பதில்தான் உடன்பாடு இல்லை. சமூகத்துக்காக யாரும் திருமணம் செய்யக்கூடாது, அதனால் பலர் அவதிப்படுவதை நான் பார்த்துள்ளேன். அன்பின் காரணமாகத்தான் ஒருவரைத் திருமணம் செய்யவேண்டும். வேறு காரணங்களுக்காக அல்ல. எனக்கேற்ற துணையை 25 வயதில் சந்தித்திருந்தால் அப்போதே திருமணம் செய்திருப்பேன் என்றார்.