ஆன்லைனில் பாபநாசம் படம்! அதிர்ச்சியில் கமல்!
கமலும் தயாரிப்பாளரும் தமிழக காவல்துறையில் புகார் செய்யவுள்ளனர்...
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல் நடித்துள்ள பாபநாசம் படம், தமிழகமெங்கும் பரவலான பாராட்டுகளைப் பெற்று ஹிட் ஆகியுள்ளது. இந்த நிலையில் படத்தின் முழு வடிவமும் ஆன்லைனில் வெளியாகியிருப்பது பாபநாசம் படக்குழுவினரை முக்கியமாக கமலை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
படம் வெளியான இரண்டே நாளில் முழு பாபநாசம் படமும் இணையத்தில் டவுன்லோட் செய்யும் விதத்தில் வெளியாகியதை அடுத்து காவல்துறையில் புகார் அளிக்க கமல் முடிவெடுத்துள்ளார். இதுபற்றி இயக்குநர் ஜீத்து ஜோசப் கூறும்போது, இணையத்தில் படம் வெளியாகியுள்ளது எங்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுபற்றி கமலிடமும் தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜியிடமும் விவாதித்துள்ளேன். கமலும் தயாரிப்பாளரும் தமிழக காவல்துறையில் இன்று புகார் செய்யவுள்ளனர் என்று தெரிவித்தார்.
இதுபற்றி மேலும் ஜீத்து ஜோசப் கூறும்போது, இணையத்தில் படம் வெளியாவதைத் தடுக்க தனியார் நிறுவனங்களின் உதவியையும் நாடியுள்ளோம். அவர்களால் இணையத்தில் வெளியாவதைத் தடுக்கமுடியுமே தவிர கைது பண்ணமுடியாது. இதைச் செய்தவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து சினிமாவைக் காப்பாற்றவேண்டும் என்றார்.
Advertisement