பாகுபலி படத்துக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு?
பிரமேம் பட திருட்டு டிவிடி விஷயத்தை முன்வைத்து ஸ்டிரைக் அறிவித்துவிட்டார்கள்.
இன்று, பாகுபலி படம், உலகம் முழுக்க 4000 திரையரங்குகளில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆரவாரம் எல்லாம் கேரளாவில் இல்லை. அங்கு மலையாளத்தில் டப் செய்யப்பட்டு 200 திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்த பாகுபலி, 50 திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸாகியுள்ளது. காரணம், கேரளத் திரையுலகில் இப்படத்துக்கு எழுந்த எதிர்ப்புதான். மலையாளத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகும் இந்தப் படத்தால் நேரடி மலையாளப் படத்துக்கு வருங்காலத்தில் பாதிப்பு வரும் என்பதால் மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
கேரளாவில் பாகுபலி படத்தை குளோபல் யுனைடெட் மீடியா வெளியிடுகிறது. பெரிய அளவில் படம் வெளியிடப்படுவதால், இதற்கு கேரளத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கெனவே தமிழ்ப் படமான ஷங்கரின் ஐ, கேரளாவில் 200 திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை அள்ளியது. இதை கேரளத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் விரும்பவில்லை எனத் தெரிகிறது. அப்போது எதிர்க்காமல் விட்டதால் இப்போது பாகுபலிக்கு செக் வைக்கிறார்கள் எனச் சொல்லப்படுகிறது. நேரடியாக காரணத்தைச் சொல்லாமல் பிரமேம் பட திருட்டு டிவிடி விஷயத்தை முன்வைத்து ஸ்டிரைக் அறிவித்துவிட்டார்கள். இதனால் பாகுபலி 50 மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் மட்டுமே வெளியாகியுள்ளது.
Advertisement
ஆனால், ரசிகர்களிடையே படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளதால் இந்தத் தடையை விரைவில் விலக்கிக்கொள்ள நேரிடும் எனத் தெரிகிறது. மேலும் 100 திரையரங்குகளில் வெளியாகவும் வாய்ப்புள்ளது.