அரங்கு நிறைந்த காட்சிகள்: 10-வது நாளிலும் வசூலை அள்ளிய ‘கடைக்குட்டி சிங்கம்’!
தமிழ்த் திரையுலகில் மிகப் பெரிய புத்துணர்ச்சியை இந்தப் படம் வழங்கியுள்ளதாகத் திரையுலகினர் கருத்து...
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் - கடைக்குட்டி சிங்கம். இதில் விவசாயி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கார்த்தி.
இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை நடிகரும் கார்த்தியின் சகோதரருமான சூர்யா தயாரித்துள்ளார். சத்யராஜ், சூரி, சயீஷா, ப்ரியா பவானிசங்கர் போன்றோர் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில் கடைக்குட்டி சிங்கம், சூப்பர் ஹிட் படம் எனத் திரையுலக வணிக வட்டாரங்களால் மதிப்பிடப்பட்டுள்ளது. முதல் நாளன்று கிடைத்த வசூலை விடவும் ஒருவாரம் கழித்து கடந்த வெள்ளியன்று அதிக வசூல் கிடைத்துள்ளது. இதனால் இந்தப் படம் முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 20 கோடி வசூலித்து சாதித்துள்ளது.
Advertisement
Advertisement
மேலும் நேற்று (ஞாயிறு) தமிழகம் முழுக்க 151 திரையரங்குகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் வெளியான 358 திரையரங்குகளில் 151 திரையரங்குகள் ஜனத்திரளில் மூழ்கியுள்ளன. இத்தனைக்கும் நேற்று பட வெளியீட்டின் 10-வது நாள். சென்னையில் 22 திரையரங்குகளில் வெளியான நிலையில் 20 திரையரங்குகளில் நேற்று மாலை அரங்கு நிறைந்த காட்சிகள்! இதனால் இந்த வருடத்தின் முதல் சூப்பர் ஹிட் படம் என திரையுலகம் கொண்டாடும் படமாக உள்ளது கடைக்குட்டி சிங்கம்.
சென்னையில் முதலில் தமிழ்ப்படம் 2 படத்துக்குப் பெரிய திரையரங்குகள் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது அந்தப் படம் மாற்றப்பட்டு, பெரிய திரையரங்குகளில் கடைக்குட்டி சிங்கம் திரையிடப்பட்டுள்ளது. செங்கல்பட்டுப் பகுதியை விடவும் வட-தென் ஆற்காடுப் பகுதியில் வெற்றிகரமாக ஓடுவதாக வெற்றி திரையரங்கைச் சேர்ந்த ராகேஷ் கெளதமன் ட்வீட் செய்துள்ளார். சமூகவலைத்தளங்களில் கணக்கு வைத்துள்ள திரையரங்குகள், இந்தப் படம் வெற்றிகரமாக ஓடுவதாகப் புகைப்பட ஆதாரங்களுடன் தகவல் தெரிவித்துள்ளன. இதனால் தமிழ்த் திரையுலகில் மிகப் பெரிய புத்துணர்ச்சியை இந்தப் படம் வழங்கியுள்ளதாகத் திரையுலகினர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.