அண்மைகாலமாகச் சமூகவலைத்தளங்களில் மீ டூ எனும் தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களையும், கொடுமைகளையும் பகிர்ந்து வருவது பரவலாகக் கவனத்தைப் பெற்று வருகிறது. குறிப்பாக, சில முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
சமீபத்தில், தன்னைப் பற்றிய ராதாரவியின் அநாகரிகமான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த பிரபல நடிகை நயன்தாரா, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஐசிசி அமைப்பை உருவாக்குவீர்களா? அப்படி உருவாக்கி, விசாகா வழிகாட்டுதலின்படி விசாரணைக் குழு அமைப்பீர்களா என நடிகர் சங்கத்திடம் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் நடிகர் சங்கர் சார்பில் மீ டூ ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படவுள்ளது. இதன் தலைவராக நாசரும் அக்குழுவில் நடிகர் சங்க உறுப்பினர்களான விஷால், கார்த்தி, பூச்சி முருகன், குஷ்பு, ரோஹிணி, சுஹாசினி போன்றோரும் இடம்பெறவுள்ளார்கள். மற்றும் சமூக ஆர்வலர், வழக்கறிஞர் என 9 பேர் கொண்ட குழுவாக மீ டூ ஒருங்கிணைப்புக் குழு அமையவுள்ளது. திரையுலகில் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள், இந்தக் குழுவிடம் முறையிடலாம். அதன்பிறகு இக்குழுவினர் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள். இந்தக் குழு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.