சென்னை: சனிக்கிழமையன்று நடைபெற்ற ரஜினியின் 'தர்பார்' பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல் குறித்த தனது பேச்சிற்கு, நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் விளக்கமளித்துளார்.
சென்னையில் சனிக்கிழமையன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடிகர் ரஜினியின் 'தர்பார்' பட ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ரஜினி ரசிகரான நடிகர் ராகவா லாரன்ஸ், தான் சிறுவயதில் நடிகர் கமலின் போஸ்டரில் சாணி அடித்ததாகக் குறிப்பிட்டார். இதற்கு சமூக வலைதளங்களில் பரவலான விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் 'தர்பார்' பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல் குறித்த தனது பேச்சிற்கு, நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் விளக்கமளித்துளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
கமல் பட போஸ்டரின் மீது சாணி அடித்தது பற்றி நான் பேசியதை சிலர் மிகைப்படுத்தி வருகின்றனர். சிறுவயதில் அதி தீவிர ரஜினி ரசிகனாக இருந்த போது என்னை அறியாமல் கமலுக்கு எதிராக அந்த காரியத்தை செய்தேன்.
எனக்கு கமல் மீது அதிக மரியாதை உள்ளது. நான் பேசியது தவறு என நினைத்தால் யாரிடம் வேண்டுமானாலும் மன்னிப்பு கேட்பேன், ஆனால் நான் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.
தர்பார் இசை வெளியீட்டு விழாவில், நான் பேசியதை முழுமையாக கேட்டால் உண்மை புரியும். அதில் கமலை பற்றி தவறாக ஏதும் பேசவில்லை. அவர் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ள அவர் தான் பேசியதன் வீடியோவையும் இணைத்துள்ளார்.