பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பின்னால் இணையும் கமல் - ஏ.ஆர் ரஹ்மான்
தமிழ் சினிமாவில் பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பின்னால் நடிகர் கமல்ஹாசனும், 'இசைப் புயல்' ஏ.ஆர் ரஹ்மானும் இணைந்துள்ளனர்.
சென்னை: தமிழ் சினிமாவில் பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பின்னால் நடிகர் கமல்ஹாசனும், 'இசைப் புயல்' ஏ.ஆர் ரஹ்மானும் இணைந்துள்ளனர்.
2016-.ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசனின் இயக்கம் மற்றும் நடிப்பில் 'தலைவன் இருக்கின்றான்' என்ற படம் இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அரசியல்வாதியின் வாழ்க்கையை அடிப்டையாகக் கொண்டு இப்படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பின்னர் பல்வேறு காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது.
அதேசமயம் 2018-ஆம் ஆண்டு 'மக்கள் நீதி மய்யம்' கட்சியைத் துவக்கிய பின்னர் ஷங்கரின் இந்தியன் 2 படத்திற்கு பிறகு படங்களில் நடிக்கப் போவதில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
Advertisement
இந்நிலையில் தமிழ் சினிமாவில் பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பின்னால் நடிகர் கமல்ஹாசனும், 'இசைப் புயல்' ஏ.ஆர் ரஹ்மானும் இணைந்துள்ளனர்.
தனது “தலைவன் இருக்கின்றான்” திரைப்படப் பணிகளை மீண்டும் துவங்கியுள்ள கமல் படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்துள்ளார். இதுதொடர்பாக ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் “ ஒன் அண்ட் ஒன்லி கமல்ஹாசனுடன் மீண்டும் ஒரு மகத்தான திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியையும் பரவசத்தையும் அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
பின்னர் இதனை ரிட்வீட் செய்த கமல்ஹாசன் “ உங்கள் பங்களிப்பால் எங்கள் அணியை வலுப்படுத்த உள்ள ஏ.ஆர். ரஹ்மானுக்கு நன்றி. ஒரு சில படங்களே அதுஉருவாகும்போதே சிறப்பானதாகவும், நன்றாகவும் வந்திருக்கின்றன. தலைவன் இருக்கின்றான் படமும் அதுபோன்ற சிறந்த படமாக இருக்கும். இந்தப்படம் தொடர்பான உங்களது உற்சாகமானது மற்றவருக்கும் பரவக்கூடிய ஒன்றாக உள்ளது. அதனை நம் குழுவின் மற்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது தமிழ் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வரும் கமல் இந்தியன்-2 படப்பிடிப்பை ஆகஸ்ட் 19-ஆம் தேதி வாக்கில் துவங்குகிறார். அதைத்தொடர்ந்து தலைவன் இருக்கின்றான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்த 2000-ம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் தெனாலி படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். அதன்பின்னர் தற்போது 19 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்திற்காக இசைப்புயலும், உலகநாயகனும் கைகோர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.