சென்னை: அத்தனை கருத்துகளையும் தலைவணங்கி ஏற்கிறேன் என்று என்ஜிகே திரைப்படம் குறித்து நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் சூர்யா - இயக்குநர் செல்வராகவன் கூட்டணியில் உருவாகிய படம் - என்ஜிகே. இப்படத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், தேவராஜ், பொன்வண்ணன், தலைவாசல் விஜய், இளவரசு, குரு சோமசுந்தரம், வேல ராமமூர்த்தி, பாலாசிங் ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கடந்த 31-ம் தேதி வெளியான என்ஜிகே திரைப்படம் சென்னையில் இதுவரை ரூ.3.07 கோடி வரையில் வசூல் செய்துள்ளது என்று தயாரிப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் கவலையான விமரிசனங்கள் வெளியான போதும் படம் குறிப்பிடத்தக்க வரவேற்பு பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அத்தனை கருத்துகளையும் தலைவணங்கி ஏற்கிறேன் என்று என்ஜிகே திரைப்படம் குறித்து நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
#NGK திரைப்படம் குறித்த அத்தனை கருத்துகளையும் தலைவணங்கி ஏற்கிறேன். மாறுபட்ட கதையம்சத்தையும் நடிகர்களின் வித்தியாசமான நடிப்பையும் நுட்பமாகக் கவனித்துப் பாராட்டிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி #NGKinTheatres #கத்துக்கறேன்தலைவரே
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.