இந்தியா-சீனா இடையேயான எல்லைத் தகராறு காரணமாக சீனப் பொருள்களைப் புறக்கணிப்போம் என பாலிவுட் நடிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இந்தியா-சீனா இடையேயான எல்லைத் தகராறு 70 ஆண்டுகளாகத் தொடா்ந்து வரும் நிலையில், இப்போது கிழக்கு லடாக்கில் இரு நாட்டு ராணுவத்துக்கும் ஏற்பட்டுள்ள மோதல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
லடாக் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்கும் விதமாக இந்தியாவும், சீனாவும் ராணுவ அளவிலும், தூதரக அளவிலும் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் தீா்வு காண விரும்புவதாக இரு நாடுகளுமே ஏற்கெனவே தெளிவாகத் தெரிவித்துவிட்டன.
இந்நிலையில் இந்தியா-சீனா இடையேயான எல்லைத் தகராறு காரணமாக சீனப் பொருள்களைப் புறக்கணிப்போம் என பாலிவுட் நடிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். நடிகர் மிலிந்த் சோமன் கூறியதாவது: டிக்டாக்கை நான் இனி பயன்படுத்தப்போவதில்லை. சீனப்பொருள்களைப் புறக்கணிப்போம் என்றார். #BoycottChineseProducts என்கிற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி பாலிவுட் நடிகர்களும் இதேபோன்ற கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்கள். நடிகர் ரன்வீர் ஷோரேவும் சீனப் பொருள்களைக் கண்டிப்பாகப் புறக்கணிக்க வேண்டும் என்றார்.
நடிகர் அர்ஷத் வார்சி கூறியதாவது: சீனப் பொருள்களைப் பயன்படுத்துவதை நான் நிறுத்தப் போகிறேன். அவை நம் வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்டாலும் இதைக் கடைப்பிடிக்க சிறிது காலமாகும். நிச்சயம் ஒருநாள் சீனப் பொருள்கள் எதுவும் என்னிடம் இருக்காது. நீங்களும் முயற்சி செய்யவேண்டும் என்றார்.