திரைப்படமாகும் ஜீவஜோதியின் 18 வருடப் போராட்டம்: அறிவிப்பு
18 வருடங்களாக நடைபெற்ற என்னுடைய சட்டபூர்வமான, உணர்வுபூர்வமான போராட்டம் பற்றி...
சரவண பவன் உணவக உரிமையாளர் மறைந்த ராஜகோபாலுக்கு எதிரான ஜீவஜோதியின் 18 வருடப் போராட்டம் திரைப்படமாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜீவஜோதி. இவரது கணவரின் கொலை வழக்கில் சரவண பவன் உணவக உரிமையாளர் மறைந்த ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2019 ஜூலை மாதம் ராஜகோபால் காலமானார்.
தண்டபாணியைத் திருமணம் செய்துள்ள ஜீவஜோதி, தஞ்சாவூரில் வசித்து வருகிறார். இவருக்கு பவின் என்கிற மகன் உள்ளார். தையல் மற்றும் உணவகம் ஆகிய தொழில்களில் ஜீவஜோதி ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் பாஜகவில் இணைந்த ஜீவஜோதி, தஞ்சை தெற்கு மாவட்ட துணைத் தலைவராக உள்ளார்.
இந்நிலையில் ராஜகோபாலுக்கு எதிரான ஜீவஜோதியின் 18 வருடப் போராட்டம் திரைப்படமாகிறது. இதுகுறித்த அறிவிப்பை மும்பையைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனமான ஜங்லீ பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. ஜீவஜோதி வேடத்தில் நடிக்கும் நடிகை உள்ளிட்ட படக்குழுவினரின் பட்டியல் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
Advertisement
Advertisement
இதுபற்றி ஜீவஜோதி கூறியதாவது:
உணவக உரிமையாளருக்கு எதிரான, 18 வருடங்களாக நடைபெற்ற என்னுடைய சட்டபூர்வமான, உணர்வுபூர்வமான போராட்டம் பற்றி படம் எடுக்க ஜங்லீ பிக்சர்ஸ் நிறுவனம் முன்வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தைத் திரையில் பார்க்கும்போது தற்போது நிலவும் ஆணாதிக்க முறையில் மாற்றம் ஏற்படும் என நம்புகிறேன் என்றார். ஜீவஜோதி படத்துக்கான திரைக்கதையை பவானி ஐயர் எழுதுகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.