மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி': திரைவிமர்சனம்
அஜய், துருதுருவென வரும் சக்தி நடித்துள்ள 'நூறு சாமி' என்ற திரைப்படத்தின் திரைவிமர்சனம்...
கள்ளக்குறிச்சியில் வசிக்கும் செல்வி (ஸ்வாசிகா) இளம் வயதிலேயே கணவனை இழந்து விட அதன் பின் தனது இரு குழந்தைகளையும் அக்கறையுடன் கடும் போராட்டத்திற்கு மத்தியில் வளர்க்கிறார். உறவினர்கள் யாரும் அவருக்கு துணை நிற்காத சூழலில் பொருளாதார பிரச்னைகளை சமாளித்து தனது பிள்ளைகளை படிக்க வைக்கிறார். ஒரு கட்டத்தில், வளர்ந்து வந்த தன் பிள்ளைகளிடம் தனக்கு மறுமணம் தொடர்பாக உள்ள விருப்பத்தை தெரிவிக்க அதனால் ஆத்திரமடைகிறார் மூத்த மகனாக வரும் பாஸ்கர் (அஜய் திஷான்). பின்னர் சில வருடங்களுக்குப் பிறகு அம்மாவின் விருப்பத்தை புரிந்து கொண்ட மகன்கள் அவருக்கு மறுமணம் செய்ய விரும்புகின்றனர். ஆனால் அதற்கு செல்வி சம்மதம் தெரிவிக்காத நிலையில் அவருக்கு மறுமணம் நடந்ததா இல்லையா என்பதே நூறு சாமி திரைப்படத்தின் கதை. கள்ளக்குறிச்சி அருகே நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இதை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சசி.
அப்பாவியான சூழல், உணர்ச்சிமிகு முகபாவனைகள், ஏக்கம் நிறைந்த கண்கள், தவிப்பு கலந்த நடிப்பு என படத்தை முழுக்க முழுக்க தாங்கி இருக்கிறார் ஸ்வாசிகா. அவரது நடிப்பிற்கு தீனி போட்ட மிக முக்கியமான படம் இது. பிள்ளைகளுக்காக உறுதியாக போராடுவது, கிராமத்து ஆண்களிடம் எதிர்த்து நிற்பது, தயக்கத்துடன் மறுமணத்தை அணுகுவது என காட்சிக்கு காட்சி உருகி இருக்கிறார். யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியுடன் உரையாடும் இடங்களில் கலங்க வைக்கிறார்.
அக்கறையுள்ள தெளிவான மகனாக அஜய், துருதுருவென வரும் சக்தி ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்வாசிகாவுடன் ஒப்பிடும்போது இவர்களின் நடிப்பு செயற்கை தணம் நிறைந்ததாக இருப்பதை மறுக்க முடியாது. இவர்களுடன் நடிகர்கள் கருணாஸ், பாலாஜி சக்திவேல் , லிஜுமோள், காவியா அனில், பகவதி பெருமாள், ஜென்சன், தாமரைச்செல்வி ஆகியோர் நடித்துள்ளனர். இரண்டாம் பாதியில் சில காட்சிகளே வந்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் விஜய் ஆண்டனி. வழக்கத்திற்கு மாறான நடிப்பை கொடுத்து கவனம் ஈர்த்திருக்கிறார் விஜய் ஆண்டனி.
Advertisement
Advertisement
பிள்ளைகள் இருக்கும் போது மறுமணம் செய்து கொள்ள பெண்கள் சந்திக்கும் சவால்கள், அது கொடுக்கும் அவலங்கள், விமர்சனங்கள் ஆகியவற்றை சரியாக கடத்த முயன்று இருக்கிறார் இயக்குநர் சசி. அதற்காக அவர் கையாண்ட வசனங்கள் சாட்டையடிகளாக திரையில் நீள்கின்றன.
"புருஷனை கொன்னு இருந்தா கூட ஒரு வருஷம் தான் ஜெயிலுக்கு போய் இருப்பேன். ஆனா அவரு இறந்தது எனக்கு ஆயுளுக்குமான சிறை", "எலி கூண்ட புடிச்சிருக்கும் பெரிய எலி எங்க அம்மா" என ஊசி குத்தும் வசனங்கள் படத்திற்கு பெரும் பலம்.
பெண்களை அடிமைகளாக வைத்திருக்க பயன்படுத்தப்படும் மரபுகள் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றிற்கு எதிரான கேள்விகள் படத்தில் பளிச்சிடுகின்றன.
இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீ ராமின் பின்னணி இசை படத்திற்கு பலமாக உள்ளது. உருக்கமான காட்சிகளுக்கு பொருத்தமான இசையைக் கொடுத்திருக்கிறார்.
ஆனால் சில காட்சிகள் அரங்கேற்றம் செய்யப்பட்ட விதம் நமக்கு செயற்கை தனத்தை ஏற்படுத்துகிறது. பகவதி பெருமாள் வினோதினி 24 மணிநேரம் கன்டென்ட்களுக்காக காத்திருக்கும் யூடியூபர்கள் என வடிவமைக்கப்பட்டது படத்தின் அசல் தன்மையிலிருந்து விலகியிருக்கிறது. படம் முழுக்க மெனக்கெட்டு இறுதிக் காட்சி சரிவர எழுதாதது போல காட்சிப்படுத்தி இருப்பது வழக்கமான படத்திற்குள் இதை கொண்டு நிறுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திவிடுகிறது.
எனினும் மறுமணம் தொடர்பான ஒரு பெண்ணின் உணர்வுகளை திரை மொழியாக்கியதற்கும், அதற்கான ஸ்வாசிகாவின் கச்சிதமான நடிப்பிற்கும் நூறு சாமியை கொண்டாடலாம்.
Is Remarriage a Crime? 'Nooru Saami' Film Review...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.