கர்ணன் படத்தின் 2-வது பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 18 அன்று சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் கண்டா வரச் சொல்லுங்க பாடல் வெளியானது. கிடக்குழி மாரியம்மாள் மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து பாடியுள்ளார்கள்.
கிராமியப் பாடல் பாணியில் அமைந்துள்ள கண்டா வரச் சொல்லுங்க, ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்று ஆச்சர்யப்படுத்தியுள்ளது. யூடியூப் தளத்தில் அதிகப் பார்வைகள் பெற்ற இப்பாடல், வெளியான முதல் 10 நாள்களிலேயே 1 கோடி பார்வைகளைப் (10 மில்லியன்) பெற்றுள்ளது. தமிழ் ரசிகர்கள் மேற்கத்திய இசை பாணியிலான பாடல்கள் மட்டும் விரும்புவதில்லை, கிராமியப் பாடலுக்கும் அமோக வரவேற்பு அளிப்பார்கள் என்பதை கண்டா வரச் சொல்லுங்க பாடல் மீண்டும் நிரூபித்துள்ளது. இந்தப் பாடல், கர்ணன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்ததோடு சந்தோஷ் நாராயணன் திரையிசை வாழ்விலும் ஒரு திருப்புமுனைப் பாடலாகவும் அமைந்துள்ளது.
இந்நிலையில் கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் பாடல் இன்று வெளியாகியுள்ளது. யுகபாரதி எழுதியுள்ள இப்பாடலை தேவா, ரீத்தா பாடியுள்ளார்கள்.
கர்ணன் படம் ஏப்ரல் 9 அன்று வெளிவரவுள்ளது.