’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரிக்கு மத்திய பாதுகாப்புப் படையினரின் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற ஹிந்தி திரைப்படம் கடந்த மார்ச் 11 ஆம் தேதி வெளியானது. 1990ல் காஷ்மீரில் ஏற்பட்ட கிளர்ச்சியில் காஷ்மீர் இந்துக்கள் வெளியேற்றப்பட்டது, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் காஷ்மீர் இந்து சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கொல்லப்பட்டதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. விவேக் அக்னிஹோத்ரி இதனை எழுதி இயக்கியிருக்கிறார். அனுபம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்கரபோர்த்தி, பல்லவி ஜோஷி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படக்குழுவினரை வரவழைத்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக கூட்டத்திலும் உண்மையை எடுத்துரைக்கும் இதுபோன்ற படங்கள் அதிகம் வர வேண்டும் என்று மோடி கூறியிருந்தார்.
இந்நிலையில், காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் இயக்குநருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என மத்திய பாதுகாப்புப் படையினரின் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
’ஒய்’ பிரிவு பாதுகாப்பு 1 தளபதி உள்பட 8 பாதுகாப்புப் படையினர் கொண்ட குழு என்பது குறிப்பிடத்தக்கது.