என்னை ஆதரித்தவர்களுக்கு நன்றி: நிவின் பாலி
பாலியல் புகாரிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் நிவின் பாலி...
நடிகர் நிவின் பாலி தன் மீது பாலியல் புகார் எழுந்தபோது தனக்கு ஆதரளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் நிவின் பாலி படவாய்ப்பு தருவதாகக் கூறி வெளிநாட்டில் தன்னிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த செப். 3 ஆம் தேதி ஊனுக்கல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இச்சம்பவம் குறித்து ஊனுக்கல் காவல் துறையிடம் சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்ததைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
Advertisement
இந்த நிலையில், அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் துபையில் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் டிச.14,15; 2023 அன்று நடிகர் நிவின் பாலி கேரளத்தில் இருந்ததை காவல்துறை உறுதி செய்துள்ளது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக நிவின் பாலிக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லையென கொத்தமங்கலம் நீதிமன்றத்தில் காவல்துறை அறிக்கையைச் சமர்பித்துள்ளது. இதனால், நிவின் பாலிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார் போலி என உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, பலரும் நிவின் பாலி பாதிக்கப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், நிவின் பாலி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எனக்கு ஆதரவாக இருந்த ஒவ்வொருவரின் அன்புக்கும், பிராத்தனைக்கும் என் மனமார்ந்த் நன்றியைத் தெரிவிக்கிறேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.
இதைக்கண்ட ரசிகர்கள், நிவினுக்கு ஆதரவாகவும் அவர் மீது களங்கம் விளைவித்தவர்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: ஆவேஷம் ரீமேக்கில் ரவி தேஜா?